Friday 31 August 2012

கண் தானம் செய்ய எஸ்.எம்.எஸ். போதும்


ஒரு எஸ்.எம்.எஸ். கொடுத்தால் போதும், கண் தானத்துக்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துச் செய்கிறது ஓர் அமைப்பு

வாழும்வரை கண்களை தானம் பெற்றுக் கொடுங்கள்’ என்ற வாசகத்துடன் கண் தான விழிப்புணர்வு பற்றி எளிமையான பிரசாரத்தை துவக்கியுள்ளார் பெங்களூருவைச் சேர்ந்த நயனஜோதி அறக்கட்டளையின் நிறுவனர் ஜெயராமன். ‘கண் தானத்தின் அவசியம் அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கும்பொழுது, எதுவும் செய்ய வேண்டாம், வாழும்வரை கண்களை தானமாக பெற்றுத் தருகிறோம். வாழ்ந்த பிறகு கண்களை தானமாகத் தருகிறோம் என்ற உறுதி மொழியை எடுத்துக்கொண்டு ஒரு குறுஞ்செய்தியை அனுப்புங்கள் போதும், மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிரசாரத்தை துவங்கியிருக்கும் ஜெயராமனிடம் அதுகுறித்துக் கேட்டோம்.

"ரோட்டரி கிளப் உதவியுடன் கண் தான விழிப்புணர்வு குறித்த பல நிகழ்ச்சிகளில்பங்கு கொண்டிருக்கிறேன். இந்த நாட்டின் பிரஜையாக ஏதாவது செய்ய வேண்டும். கண்தானம் பற்றிய விழிப்புணர்வையே முழு வீச்சில்செய்யலாமே என்று செயலில் இறங்கினேன். கண் தான அவசியம் குறித்து அனைவரும் அறிந்திருப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்தியாவில் 500 கண் வங்கிகள் உள்ளன. 15 லட்சம் பேர் கார்னியா எனப்படும் விழி வெண்படலத்தில் ஏற்பட்டுள்ள கோளாறால், பார்வைத் திறன் இல்லாமல் இருக்கிறார்கள். மாற்றுக் கண் பொருத்துவதன் மூலம் இவர்களுக்கு பார்வை தர முடியும். குறைந்தது ஆண்டிற்கு ஒரு லட்சம் கண்கள் தேவை. நம்மிடம் மாற்றுக் கண் அறுவைச் சிகிச்சை செய்ய அந்தளவிற்கே டாக்டர்கள் இருக்கிறார்கள். சென்ற ஆண்டு மட்டும் 75 லட்சம் பேர் கண் தானம் செய்திருக்க முடியும். அவர்களிடமிருந்து 150 லட்சம் கண்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? 500 வங்கிகளும் சேர்த்து 40 ஆயிரம் கண்கள் மட்டுமே பெற முடிந்திருக்கிறது. அதிலும் மற்றவர்களுக்கு பொருத்தக் கூடிய நிலையில் இருந்தது வெறும் 15 ஆயிரம் கண்கள் மட்டுமே. கண் வங்கியை தொடர்புகொண்டு எத்தனை பேர் உறுதி மொழி எடுத்துக்கொள்கிறார்கள் என்று கேட்டபோதும் அதிகபட்சம் 4 ஆயிரம் பேர் என்ற தகவலும் அதிர்ச்சியாகவே இருந்தது.

இலங்கை எத்தனை குட்டியான நாடு. அங்கிருந்து ஆண்டிற்கு 50 ஆயிரம் கண்கள் ஏற்றுமதி செய்கிறார்கள். ஆனால், நம்மால் ஏன் முடியவில்லை என்று யோசித்தபோதுதான் பழைய முறையையே பின்பற்றுவதைவிட இன்னும் எளிமையாக, புதுமையாகச் செய்தால் நிறையப் பேர் கண் தானம் செய்யவும் கண்களை பெற்றுத் தரவும் முன் வருவார்கள் என்று தோன்றியது. விளைவு, குறுஞ்செய்தி சேவையை ஆரம்பித்தேன்.

இதற்கிடையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்துப் பேசினேன். 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணை இதில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்துள்ளார்கள். இதன்படி, கண் தானம் செய்ய விரும்புபவர் 108ஐ தொடர்புகொண்டால், அவர்கள் அருகிலுள்ள தனியார் அல்லது அரசு கண் வங்கிக்குத் தொடர்பு ஏற்படுத்தித் தருவார்கள். மருத்துவக் குழுவினர் வந்து கண்களை பெற்றுக்கொள்வார்கள். தவிர, கண் தானம் செய்ய விரும்புபவர்கள் EYE என்று டைப் செய்து தங்கள் பெயர், ஊர் விவரங்களைச் சேர்த்து 99443 13131 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்தால் போதும், மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்வோம்" என்றார் ஜெயராமன்.

நாடு முழுவதும் இந்தச் சேவையை விரிவுபடுத்தவும் உள்ளார்கள்.

மேலும் விவரங்களுக்கு நயனஜோதி டிரஸ்ட்: 9845143650

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இனைக்கவும்



No comments:

Post a Comment